ஆந்திரா. என்.டி.ஆர் மாவட்டம், கரிக்காபாடு காவல் சோதனை சாவடியில் 8 கோடி ரூபாய் பணத்தை மறைத்து எடுத்து வந்த லாரியை மடக்கி பிடித்துள்ளனர் ஆந்திரா மாநில போலிசார். இன்னும் 4 நாட்களில், அதாவது மே மாதம் 13-ம் திகதி ஆந்திராவில் லோக்சபா தேர்தலுடன் சேர்த்து சட்டசபை தேர்தலும் நடைபெற உள்ள நிலையில், இந்த 8 கோடி ரூபாய் சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்தியா முழுவதும் உள்ள மாநிலங்களில் கடந்த ஏப்ரல் 19-ம் திகதி முதல் லோக்சபா தேர்தல்கள் பல கட்டங்களாக நடந்து வருகின்றன. மே 7-ம் திகதியுடன் மூன்று கட்ட வாக்கு பதிவுகள் நடந்து முடிந்துள்ள நிலையில், வருகின்ற 13-ம் திகதி ஆந்திராவில் லோக்சபா தேர்தலுடன் சேர்த்து சட்டசபை தேர்தலும் நடைபெற உள்ளது.
மக்களுக்கு ஓட்டுக்கு பணம் கொடுப்பதை தடுக்கவும், சட்ட விரோத பணப் பட்டுவடா மற்றும் தேர்தல் முறைகேடுகளை தடுக்கும் நோக்கத்தில் முன்னேற்பாடுகளாக நாடு முழுவதும் போலிசார், பறக்கும் படையினர் மற்றும் தேர்தல் அதிகாரிகள் தொடர் சோதனைகள் மற்றும் வாகன தணிக்கையில் ஈடுபட்டு வருகின்றனர்.
நேற்று. மே 8-ம் திகதி, ஆந்திர மாநிலம் என்.டி.ஆர் மாவட்டம், கரிக்காபாடு காவல் சோதனை சாவடியில் ஆந்திர போலிசார் மற்றும் பறக்கும் படையினன் வாகன சோதனையில் ஈடுபட்டிருந்தனர். அப்பொழுது, கரிக்காபாடு சோதனை சாவடியை கடந்து செல்ல முயன்ற லாரி ஒன்றை வழக்கமான சோதனைக்கு உடபடுத்தினர் போலிஸார். பைப்புகள் ஏற்றி வந்திருந்த அந்த லாரியில், ரகசிய அறைகள் அமைத்து 8 கோடி ரூபாய் பணம் கட்டு கட்டாக அடுக்கி பதுக்கி வைக்கப்பட்டிருந்ததன.
அந்த ரகசிய அறைகளில் இருந்த 8 கோடி ரூபாய் பணத்தை கைப்பற்றிய போலிசார். அதற்கான முறையான ஆவணங்கள் பற்றி விசாரித்த பொழுது, அந்த 8 கோடி ரூபாய் பணமும் உரிய ஆவணங்கள் இன்றி சட்ட விரோதமாக கடத்தி செல்லப்படுவது தெரியவந்தது. அந்த லாரி ஓட்டுநர் மற்றும் க்ளினரை கைது செய்த போலிஸ் தொடர்ந்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
"கைப்பற்றப்பட்ட 8 கோடி ரூபாய் பணத்தையும் உரிய அதிகாரிகளிடம் ஒப்படைத்துள்ளோம். தேர்த்தல் அதிகாரிகளும் பறக்கும் படையினரும் மேற்கொண்டு நடவடிக்கைகளை எடுப்பார்கள். தொடர்ந்து விசாரணை நடைபெற்று வருகிறது". என தெரிவித்தார் பணத்தை கைப்பற்றிய ஜக்கையா பேட் இன்ஸ்பெக்டர் சந்திரசேகர்.
இந்த 8 கோடி ரூபாய் பணமும் ஹைதராபாத்தில் இருந்து ஆந்திராவின் குண்டூருக்கு கொண்டு சொல்ல முயன்றது ஆரம்பகட்ட விசாரணையில் தெரியவந்துள்ளது.