நாம் இதுவரை பலவிதமான பிளாஸ்டிக் சர்ஜரி பற்றி கேள்விப்பட்டிருப்போம். நீளமான மூக்கை குட்டியாக மாற்றவும், சிறிய உதடுகளை பெரிதாக காட்டவும் பிளாஸ்டிக் சர்ஜரி மூலம் தனது முகத்தை ஹீரோ, ஹீரோயின்கள் மெருகேற்றிக் கொள்கின்றனர். ஆனால் ஒரு காது முழுவதையும் தன் உடம்பில் வளர வைத்து அதனை மீண்டும் பொருத்திக் கொள்ளும் படியான ஒரு நிகழ்வு உலகிலேயே முதன்முறை நடந்துள்ளது.
2016 ஆம் ஆண்டு பிரைவேட் ராணுவ விநியோக கிளர்க்கான 'ஷாமிக்கா புரேஜ்' என்ற 20 வயது பெண் விடுமுறைக்காக மிசிசிபியில் இருக்கும் தனது வீட்டிற்கு சென்று விட்டு வேலைக்கு திரும்பி உள்ளார். அப்போது எதிர்பாரா விதமாக ஷாமிகா சென்ற காரின் முன்பக்க டயர் வெடித்து சிதறியது. ஷாமிக்காவுடன் சென்ற அவரது அத்தை மகள் 8 மாத கர்ப்பிணி உட்பட இருவரும் காரில் இருந்து சுமார் 700 அடி தூக்கி வீசப்பட்டனர். நல் வேலையாக ஷாமிகாவின் அத்தை மகள் சிறு காயங்களுடன் உயிர்த்தப்பினார். மூன்று முறை கார் சுழற்றி அடிக்கப்பட்டு நடந்த கோர விபத்தில் ஷாமிக்காவின் தலை அடிபட்டு, சில முதுகெலும்புகள் நொறுங்கி, தனது இடது காது முழுவதையும் இழந்தார்.
இந்த கோர சம்பவத்தை பார்த்து அக்கம்பக்கத்தினர் உடனே ஆம்புலன்ஸ்க்கு போன் செய்து, பிறகு இருவரும் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். ஷாமிக்காவிற்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது.
இந்த சம்பவம் குறித்து ஷாமிக்கா கூறியது,"காரில் இருந்து விழுந்ததும் நான் கண்விழித்து பார்த்தபோது என் அருகில் எட்டு மாத கர்ப்பிணியான என் அத்தை மகள் இருந்தாள். உடனே அக்கம் பக்கத்தினர் எங்களை காப்பாற்ற ஓடிவந்தனர். அதன் பிறகு மயக்கம் அடைந்த நான் கண்விழ்த்துப் பார்க்கும்போது மருத்துவமனையில் இருந்தேன் " என்று அமெரிக்க பத்திரிக்கை ஒன்றிற்கு பேட்டி அளித்திருந்தார்.
மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட ஷாமிகாவை மருத்துவர்கள் பரிசோதித்து, அடுத்த 30 நிமிடங்களில் தகுந்த சிகிச்சை அளிக்கவில்லை என்றால் உயிருக்கே ஆபத்தாகிவிடும் என்று கூறி உள்ளனர். கண்ணாடியில் தனது முகத்தைப் பார்த்த ஷாமிக்காவிற்கு இடது காது இல்லாமல் தனது முகத்தை பார்க்கவே பிடிக்கவில்லை. பெண்கள் என்றாலே தனது முகத்தை எப்போதும் அழகாக வைத்துக் கொள்ள வேண்டும் என்று நினைப்பார்கள். தழும்புகள் கூட சில மாதங்களில் மறைந்து விடும். ஆனால் ஒரு காது இல்லாமல் இளம் வயதிலிருந்தே வாழ்வது மிக மிகக் கடினம் அல்லவா?
அப்போதுதான் ராணுவ முகாமின் லெப்டினன்ட் கர்னல் 'ஓவன் ஜான்சன்' ஒரு நல்ல யோசனை ஒன்றினை கூறினார். முழுவதுமாக காது ஒன்றினை வளரச்செய்து அதனை பொருத்தப்படுவது தான் ஒரே வழி என்று இறுதியாக முடிவு செய்தனர்.
"ஆரம்பத்தில் இது போன்ற சிகிச்சைகள் செய்ய வேண்டுமா என்று நினைத்தேன். அதன் பிறகு இதுவும் ஒரு நல்ல யோசனை என்று கருதி 'ப்ரோஸ்தெட்டிக்' என்று சொல்லப்படும் செயற்கை அறுவை சிகிச்சை மூலம் முழு காது ஒன்றினை திரும்ப உருவாக்கலாம் என்ற யோசனை எனக்கு பிடித்திருந்தது. மேலும் தழும்புகள் பெரிய அளவில் தெரியாது என்ற காரணத்தினால் நான் இந்த சிகிச்சைக்கு சம்மதித்தேன் ", என்று ஷாமிகா கூறியுள்ளார்.
மருத்துவர்கள் ஷாமிக்காவின் விலா எழும்பின் குறுத்து எலும்புகளை எடுத்து அதனை முன்னணங்கையின் உள்ளே பொருத்தி ரத்த ஓட்டங்களை முதலில் சீர்படுத்துனர். ரத்த ஓட்டங்கள் சீர்படுத்தப்பட்ட பிறகு ஷாமிகாவிற்கு தனது கையில் காது போன்ற உருவத்தில் விலா எலும்புகள் வளர தொடங்கின. சில மாதங்கள் கழித்து ஷாமிக்காவின் முன்னங்கையில் வளர்ந்த காதை தலையின் இடது புறம் வெற்றிகரமாக அறுவை சிகிச்சை மூலம் பொருத்தப்பட்டது. சிகிச்சைக்குப் பிறகு செவித்திறன் எந்த பாதிப்பும் இன்றி செயல்பட்டது.
"இது போன்ற ஒரு அறுவை சிகிச்சை செய்வது எங்களுக்கு இதுவே முதன்முறை. அதுவும் வெற்றிகரமாக நடந்து முடிந்தது எங்களுக்கு மிகவும் சந்தோஷமாக உள்ளது. இது ஒரு மெடிக்கல் மிராக்கிள்", என்று மருத்துவர் வால்டர்ஸ் கூறியுள்ளார்.
"இதுபோன்ற செய்முறை நீண்ட நாட்கள் எடுத்துக் கொண்டாலும், நான் முன்பு போலவே தோற்றமளிப்பது எனக்கு மிகவும் சந்தோஷத்தை கொடுக்கிறது" என்று ஷாமிக்கா மனநிறைவோடு கூறியுள்ளார். பிளாஸ்டிக் சர்ஜரி என்று சொன்னாலே முகத்தை அழகு படுத்துவதற்காக என்ற எண்ணம் அனைவருக்கும் உள்ளது. இது போன்ற நிகழ்வுகளால் பிளாஸ்டிக் சர்ஜரியில் எதுவும் சாத்தியம் என்பது மக்களுக்கு தெரிய வருகின்றது.