இந்த உலகத்தில் நீங்கள் எதை வேண்டுமானாலும் செயற்கையாக உருவாக்கலாம். செயற்கை இதயம், நுரையீரல், கால், கை விரல்கள், சிறுநீரகம் போன்று பலவற்றை மருத்துவத்தில் ஆராய்ச்சியாளர்கள் உருவாக்கியுள்ளனர். மருத்துவத்தில் ஏஐ தொழில்நுட்பத்தை பயன்படுத்தி அறுவை சிகிச்சை கூட மேற்கொண்டு வருகின்றனர். ஆனால் இவை அனைத்தும் சீராக செயல்பட மூலதனமாக இருப்பது இரத்தம். உடம்பில் இரத்த அளவு சீராக இருந்தால் மட்டுமே எதுவும் சாத்தியம். உலகம் முழுவதும் ஒவ்வொரு நாளும் உயிர்களை காப்பாற்றுவதில் இரத்த பரிமாற்றம் முக்கிய பங்கு வகிக்கிறது. அதிலும் ஓ நெகட்டிவ் போன்ற அரிய வகை இரத்தத்திற்கான தேவை அதிகளவில் உள்ளன.
மருத்துவத்தில் உலகிளாவிய பிரச்சனையாக இருப்பது இரத்த பற்றாக்குறை. புற்றுநோய் போன்ற கொடிய நோய்களால் பாதிக்கப்பட்டவர்கள் சிலருக்கு ஒவ்வொரு நாளும் இரத்தம் தேவைப்படுகிறது. உலகில் இரத்தத்தை தவிர எதை வேண்டுமானாலும் செயற்கையாக உருவாக்கிக் கொள்ள முடியும் என்று நாம் நினைத்துக் கொண்டிருந்தோம். அது இப்போது பொய்யாகிவிட்டது. அனைத்து உலக நாடுகளுமே வாயைப் பிளந்து பார்க்கும் அளவிற்கு ஜப்பானில் உள்ள மருத்து ஆய்வாளர்கள் செயற்கை இரத்தத்தை உருவாக்கி, வெற்றி அடைந்துள்ளனர்.
ஜப்பானில் உருவாக்கப்பட்ட செயற்கை ரத்தத்தை உலகளாவிய பயன்பாட்டிற்கும் சேமித்து வைப்பதற்கும் ஏற்றதாக உள்ளது என்றும், இது 2030-ம் ஆண்டு தொடக்கத்தில் இருந்து அவசர மருத்துவ சேவைகளில் ஒரு முக்கிய மாற்றத்தை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. இந்த செயற்கை ரத்தம் ஓ பாசிட்டிவ், பி நெகட்டிவ் என எந்த வகை ரத்தமுடையவர்களாக இருந்தாலும் அனைவருக்குமே ஏற்றுக் கொள்ளக்கூடிய வகையில் உருவாக்கப்பட்டுள்ளது. இதனால், உலகளாவிய பிரச்சனையாக இருக்கும் இரத்த பற்றாக்குறைக்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் இந்த கண்டுபிடிப்பு உலகளாவிய தீர்வாக அமைந்துள்ளது.
ஜப்பானின் தேசிய பாதுகாப்பு மருத்துவக் கல்லூரி மற்றும் பிற நிறுவனங்களின் ஆராய்ச்சியாளர்கள் இனைந்து, பேராசிரியர் ஹிரோமி சாகாயின் தலைமையிலான குழு ஹீமோகுளோபின் வெசிகல்(Hb-V) தொழில்நுட்பம் எனப்படும் நுட்பத்தை பயன்படுத்தி இந்த செயற்கை ரத்தத்தை உருவாக்கியுள்ளனர். ஹீமோகுளோபின் வெசிகல் என்பது செயற்கை இரத்த சிவப்பணுக்கள் ஆகும். பொதுவாக ரத்த வங்கிகள் மற்றும் மருத்துவமனைகளுக்கு வழங்கப்படும் ரத்தத்திற்கு 42 நாட்கள் மட்டுமே ஆயுட்காலம் உண்டு. ஆனால், இந்த செயற்கை இரத்தத்தை அறையின் வெப்பநிலையில் இரண்டு ஆண்டுகள் வரை கெட்டுப் போகாமல் பாதுகாத்து வைத்திருக்க முடியுமாம்.
இதை எப்படி உருவாக்கினார்கள் தெரியுமா? காலாவதியான ரத்த மாதிரியிலிருந்து ஹீமோகுளோபினை பிரித்தெடுத்து இந்த செயற்கை ரத்தம் தயாரிக்கப்பட்டுள்ளது. பிறகு, அது செயற்கை லிப்பிட் சவ்வுகளுக்குள் இணைக்கப்பட்டு உண்மையான சிவப்பு இரத்த அணுக்களை பிரதிபலிக்கும் வெசிகல்களை உருவாக்குகிறது. இந்த வெசிகல்கள் இயற்கையான மனித ரத்த அணுக்களைப் போலவே இரத்த ஓட்டத்தில் ஆக்ஸிஜனை கொண்டு செல்ல முடியும். ஆனால் இவை பார்ப்பதற்கு மனித இரத்தத்தை போன்று சிவப்பு நிறத்தில் இல்லாமல், நீல நிறத்தில் காணப்படுகின்றன.
கடந்த மார்ச் மாதம், 100 முதல் 400 மில்லிலிட்டர் செயற்கை இரத்தத்தை விலங்குகள் மற்றும் ஆரோக்கியமான 20 முதல் 50 வயதுக்குட்பட்ட மனித தன்னார்வலர்களிடம் பரிசோதிக்கப்பட்டு, அதில் எந்த விதமான பக்கவிளைவுகளும் ஏற்படவில்லை என்று ஆரம்பகட்ட சோதனைகள் காட்டுகின்றன. இந்த முயற்சி அனைத்து விதமான சோதனைகளிலும் வெற்றி அடைந்தால் 2030 ஆம் ஆண்டுக்குள் பயன்பாட்டுக்கு வரும் என்றும், இது மருத்துவ உலகில் பெரும் புரட்சியை ஏற்படுத்தும் என்றும் எதிர்பார்க்கப்படுகிறது. மேலும் இந்த கண்டுபிடிப்பு நோபல் பரிசுக்கு தகுதியானது என்று பலரும் கருத்து தெரிவித்து வருகின்றனர்.
என்னதான் அமெரிக்கா மற்றும் இங்கிலாந்து போன்ற பெரிய நாடுகளில் இது போன்ற ஆராய்ச்சிகள் பல வருடங்களாக நடந்து வந்தாலும் ஜப்பானிய ஆராய்ச்சியாளர்களின் இந்த அசாதாரண கண்டுபிடிப்பு மருத்துவத்துறையில் ஒரு திருப்ப முனையை ஏற்படுத்த உள்ளது. இதுவரை உலகெங்கிலும் உள்ள விருப்பமுள்ள தன்னார்வலர்கள் ரத்ததானம் வழங்கி வந்தனர். இருந்தும் கூட சில அரிய ரத்த வகைகளுக்கு தட்டுப்பாடுகள் இருக்கத்தான் செய்கின்றன.
மக்கள் தொகை பெருக்கத்தால் பாதுகாப்பான இரத்தமாற்றத்திற்கான தேவையும் அதிகரித்து வருகிறது. மேலும் அவைகளுக்கு பல கட்டுப்பாடுகளும் இருந்தன. இனி அந்தக் கவலையே இல்லை. ஜப்பானின் செயற்கை ரத்தத் திட்டம் இந்த கதையை மாற்றியுள்ளது. இதன் மூலம், அவசர காலங்களில் ரத்தம் கிடைக்காமல் சிரமப்படும் மக்களுக்கு ஒரு வரப்பிரசாதமாக அமையும் என்பதில் துளியும் சந்தேகமில்லை.