ஆராய்ச்சியாளர்கள் பூமியில் நடக்கும் ஆச்சரியங்களுக்கு விளக்கம் கொடுக்கிறார்களோ இல்லையோ, விண்கல் பூமியை நோக்கி வருகின்றது, வானில் இன்று நிலவு சிவப்பு நிறத்தில் தெரியும் என்பது போன்று விண்வெளியில் நடக்கும் விஷயங்களை தினந்தோறும் அப்டேட் கொடுத்துக் கொண்டே இருக்கிறார்கள். அந்த வரிசையில் இன்று சூரிய மண்டலத்திற்கு அப்பால் புதிய கிரகம் ஒன்று இருப்பதாகவும், அது பூமியை விட எட்டு மடங்கு பெரியது எனவும் கண்டுபிடித்துள்ளனர்.
நமது சூரிய குடும்பத்தில் மொத்தமாக எட்டு கிரகங்கள் உள்ளன. முன்னதாக புளூட்டோ ஒன்பதாவது கிரகமாக இருந்தது. ஆனால் நாளடைவில் அதை கிரகம் என்ற பட்டியலில் இருந்து நீக்கி விட்டனர். தற்போது மீண்டும் ஒரு புதிய கிரகம் ஒன்றினை கண்டுபிடித்து, அதனை ஒன்பதாவது கிரகம் என்று விஞ்ஞானிகள் குறிப்பிடுகின்றனர். காரணம் என்னவென்றால் அது பூமியை விட ஐந்து முதல் ஏழு மடங்கு பெரிதாக உள்ளது.
இந்த பிரபஞ்சத்தில் நாம் தனியாக இருக்கிறோமா? வேற்று கிரக வாசிகள் இருக்கிறார்களா? பூமிக்கு வெளியே உயிர்கள் இருக்கிறதா? உயிர்கள் இல்லை என்றால் வேறு என்னென்ன இருக்கின்றது? இது போன்ற கேள்விகள் தான் மனிதர்களை ஆர்வம் கூட்டி இதனை பற்றி ஆழமாக ஆராய கட்டாயப்படுத்துகின்றன. அந்த வகையில் சூரிய குடும்பத்திற்கு வெளியே ஒரு கிரகம் செழிப்புடன் வாழ்கின்றது என்ற தகவல் தான் தற்போது ஆச்சரியத்தை ஏற்படுத்தி உள்ளது.
இந்த ஒன்பதாம் கிரகத்தை கண்டுபிடிக்க 2014 ஆம் ஆண்டு முதலே தேடுதல் தொடங்கியது. 1990 ஆம் ஆண்டு முதல் தற்போது வரை சுமார் 5876 புற கோள்களை விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர். ஆனால் தற்போது சூரிய குடும்பத்திற்கு வெளியே உள்ள எக்சோ ப்ளானட்டில் "ஹைசியன் உலகம்" என்ற கோளில் உயிரினங்கள் வாழ முடியும் என விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.
பல சிறப்புகள் நிறைந்த இந்த ஹைசியன் கோளை நாசா விஞ்ஞானிகள் கே 2-18 பி (K 2-18B) என பெயரிட்டுள்ளனர். இது பூமியை விட 8.6 மடங்கு பெரியது. பூமியிலிருந்து சுமார் 124 ஒளி ஆண்டுகள் தொலைவில் லியோ விண்மீன் தொகுப்பில் உள்ளது. அதாவது பூமியிலிருந்து கிட்டத்தட்ட 9.5 ட்ரில்லியன் கிலோமீட்டர் தொலைவில் அமைந்துள்ளது. கடந்த 2015 ஆம் ஆண்டு ஜேம்ஸ் வெப் தொலைநோக்கி மூலம் ஆராய்ச்சி செய்த போது பூமியை போன்றே தட்பவெப்ப நிலையுடன் கூடிய ஒரு கோளின் வளிமண்டலத்தில் நீராவி இருப்பது முதல் முறையாக கண்டுபிடிக்கப்பட்டது.
பின்னர், கடந்த 2023 ஆம் ஆண்டு "ஹைசியன் கோளில்" ஹைட்ரஜன், ஹீலியம், மீத்தேன் மற்றும் கார்பன் டை ஆக்சைடு போன்ற வாயுக்கள் இருப்பதும் கண்டறியப்பட்டது. தொடர்ந்து ஆராய்ச்சிகள் நடத்தப்பட்டு வந்த நிலையில் உயிரியல் செயல்முறைகளால் மட்டுமே உற்பத்தி செய்யப்படும் டை மெதில் சல்பைடு மற்றும் டை மெதில் டை சல்பைட் ஆகிய இரண்டு வாயுக்கள் இருப்பதும் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. இதனால் அங்கு நுண்ணுயிர்கள் வாழ்வதற்கான சாத்திய கூறுகள் உள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளது. தற்போது அங்கு உயிரியல் செயல்முறைகள் நடந்து வருவதாகவும் விஞ்ஞானிகள் தெரிவித்துள்ளனர்.
இந்திய வம்சாவளியைச் சேர்ந்த விஞ்ஞானியும், கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தின் வான் இயற்பியல் மற்றும் வெளிக்கோல் அறிவியல் துறை பேராசிரியருமான மதுசூதன் "ஹைசியன் கோளைப்" பற்றி ஆராய்ச்சி செய்து வருகிறார். இது குறித்து அவர் கூறுகையில்,"ஹைசியன் கோளில் டை மெதில் சல்பைடு மற்றும் டை மெதில் டை சல்பைட் ஆகிய இரண்டு வாயுக்கள் பூமியை காட்டிலும் ஆயிரம் மடங்கு அதிகமாக இருக்கும். மேலும் ஹைசியன் கோளில் உயிரினங்கள் இருப்பதை உறுதிப்படுத்தினால், விண்மீன் மண்டலத்தில் மனிதர்கள் உயிர் வாழ தகுதியுள்ளதாக இருக்கும். ஆனால் இதில் நிறைய சவால்களும் உள்ளன. இந்த ஆராய்ச்சி மூலமாக பிரபஞ்சத்தில் நாம் தனியாக இருக்கிறோமா? என்ற கேள்விக்கு பதில் கிடைக்க வாய்ப்பு உள்ளது" என்று அவர் தெரிவித்துள்ளார்.