பொதுவாக செல்லப்பிராணிகள் தங்கள் உரிமையாளர்களை காப்பாற்றிய கதைகளை நாம் அதிகம் கேள்விப்பட்டிருப்போம். ஆனால் காட்டு விலங்குகள் முற்றிலும் வேறுபட்டது. அவைகளுக்கு தெரிந்தவை எல்லாம் வேட்டையாடி பசியை தீர்த்துக்கொள்ள உணவு தேடுவது மட்டுமே. அது எந்த உயிரினமாக இருந்தாலும் பாரபட்சம் பார்க்காமல் கொன்று தீர்த்து விடும். இருந்தும் சில காட்டு விலங்குகள் மனிதர்களை காப்பாற்றியுள்ளன. அவை அனைத்தும் வேண்டும் என்றே மனிதர்களை காப்பாற்றவில்லை.
காட்டு விலங்குகளுக்கு உணர்வுகள் இல்லை என்று சொல்வார்கள். ஆனால், ஆப்பிரிக்காவின் எத்தியோப்பியா நாட்டில் நடந்த ஒரு சம்பவம் நம் அனைவரையுமே பிரம்மிப்பூட்ட வைக்கும். 3 சிங்கங்கள் சேர்ந்து ஒரு பெண்ணை கடத்தல் காரர்களிடமிருந்து காப்பாற்றியுள்ளது.
தொலைந்து போன 12 வயது பெண்.
அடிஸ் அபாபா என்ற 12 வயது பெண் தனது வீட்டில் இருந்து ஒரு நாள் திடீரென்று மாயமாகிவிட்டார். இது சாதாரணமாக ஒரு நாள் நடந்த நிகழ்வு அல்ல. சிறுமி ஒவ்வொரு நாளும் பள்ளிக்குச் சென்று வருகையில் அடையாளம் தெரியாத நபர்கள் அவளை பின்தொடர்ந்துள்ளனர். எப்படியாவது இந்த சிறுமையை கடத்திக் கொண்டு போய் விற்று விட்டால் நிறைய சன்மானம் கிடைக்கும் என்று பல நாட்கள் திட்டம் போட்டுள்ளனர். திட்டம் போட்டபடியே மிகத் துல்லியமாக, சிறுமி பள்ளிக்குச் சென்று வருகையில், சில நிமிடங்களில் வாயை அடைத்து நகரத்திலிருந்து வெகு தொலைவில் கொண்டு சென்று விட்டனர்.
சிறுமியின் குடும்பத்தினர் அபாபா வீடு திரும்பாததால் மிகவும் பதற்றத்துடன் போலீசில் புகார் அளித்தனர். பல மணி நேரம் ஆகியும் அபாபாவை பற்றி எந்த தகவலும் கிடைக்கவில்லை. அபாபா தொலைந்து போனதற்கான எந்த தடயங்களும் இல்லை. அடையாளம் தெரியாத நான்கு நபர்கள் தான் அச்சிறுமியை கடத்தி சென்றுள்ளனர் என்று தெரியாமல் சிறுமியின் குடும்பத்தினர் செய்வதறியாது துடித்தனர்.
கடத்திச்சென்ற கொடூர ஆசாமிகள் சிறுமியை கட்டாயப்படுத்தி திருமணம் செய்து கொள்ள பலமுறை அடித்து துன்புறுத்தியுள்ளனர். சிறுமியின் கதறல் சத்தத்தை கேட்டு ஓடி வந்து உதவி செய்யக்கூட வழியில்லாத நிலை ஏற்பட்டது. காரணம், அந்த கொடூர நபர்கள் அச்சிறுமியை 'சவானா' காட்டிற்குள் கூட்டிச் சென்றுவிட்டார்கள்.
பல மணி நேரம் என்பது நாட்களாக மாறியது. சிறுமியைப் பற்றிய எந்த தகவலும் பெற்றோர்களுக்கு கிடைக்கவில்லை. சூழ்நிலை எவ்வளவு மோசமாக இருக்கிறது என்று அச்சிறுமியின் பெற்றோருக்கு தெரிந்தும் கூட எளிதில் மனம் தளரவில்லை. நண்பர்கள், அக்கம் பக்கத்தினர், போலீஸ் அதிகாரி என அனைவருமே ஒன்று சேர்ந்து அபாபாவை தேடி அலைந்தனர். தனது மகள் எங்கு இருக்கிறாள்? உயிருடன் தான் இருக்கிறாளா? இது போன்ற கேள்விகள் தான் பெற்றோர்களுக்கு இருந்தது.
ஹீரோவாக மாறிய 3 சிங்கங்கள்.
சவானா காட்டில் சிறிது நேரத்தில் சூழ்நிலை அனைத்தும் மாறிவிட்டன. ஏனென்றால் கடத்தல் கும்பல் செய்த ஒரே தவறு சிறுமியின் அதீத அலறல் சத்தத்தை தடுக்காதது. அது மொத்த சவானா காடெங்கும் ஒலித்து, தூங்கிக் கொண்டிருந்த சிங்கங்களை எழுப்பி விட்டன. அலரல் சத்தம் கேட்கும் திசையை நோக்கி மூன்று சிங்கங்கள் சென்றன. பசியோடு காத்துக் கொண்டிருக்கும் சிங்கங்களாக இருந்தால் இன்று ஒரு நல்ல நாளாக அமையும். ஏனெனில், வனவிலங்குகள் எந்த சூழ்நிலையிலும் வேட்டையாடும் வாய்ப்பை தவற விடுவதில்லை.
மெதுவாக சத்தம் கேட்கும் திசையை நோக்கிச் சென்று மனிதர்கள் இருப்பதை கண்டன. சிங்கங்களில் ஒன்று உயரமான புல்வெளியில் இருந்து குதித்தது. கடத்தல்காரர்கள் சிங்கத்தின் முகத்தை பார்த்தவுடன் பீதியில் அலறியடித்து ஓட ஆரம்பித்தனர். ஆள விட்டா போதும்டா சாமி என்று தலை தெரிக்க இருந்த இடம் தெரியாமல் சிறுமியை விட்டுவிட்டு ஓடிவிட்டனர்.
சிங்கங்களின் இரக்க குணம்.
சிங்கங்கள் மனித உருவங்களை கண்டவுடன் உடனே பாய்ந்து சென்று, அவர்களை தாக்கிக் கொன்று இருக்கலாம். நான்கு பேர் தப்பித்து ஓடிய பிறகும் கூட எஞ்சி இருக்கும் சிறுமியை இறையாக பார்த்திருக்கலாம். ஆனால் அப்படி எதுவும் நடக்கவில்லை. ஏற்கனவே துயரத்தில் அழுது கொண்டிருக்கும் சிறுமையை கண்டு இரக்கப்பட்டு துளியும் சீண்டாமல் தன் இனத்தைச் சேர்ந்த ஒரு குழந்தை போன்று நினைத்து பாதுகாத்துக் கொண்டன.
சிங்கங்கள் ஏன் சிறுமையை தாக்கவில்லை? இதற்கு நெறிமுறை வல்லுனர்கள் பல கருத்துக்களை முன்வைத்துள்ளனர். குழந்தையின் அலறல் சத்தம் உதவிக்கு ஏங்கும் ஒரு சிங்கக்குட்டியின் அழுகை போன்று ஒத்து இருக்கலாம். அதனால் சிங்கங்களுக்கு பாதுகாக்க வேண்டும் என்ற உள்ளுணர்வை தூண்டி இருக்கும்.
இல்லையெனில், சமீபத்தில் வேட்டையாடி இருந்திருந்தால் பசியோடு இருந்திருக்க வாய்ப்பு இல்லை. அதனால் கூட சிறுமையை தாக்காமல் இருந்திருக்கலாம் என்று பல கோட்பாடுகளை நம்மால் யூகிக்க முடிகிறது. சில மணி நேரம் பாதுகாத்திருந்தால் கூட பசி உணர்வு இல்லாத காரணம் என்று கூறலாம். ஆனால், முழுமையாக இரண்டு நாட்கள் தனது இனத்தைச் சேர்ந்த உயிர் போன்று பத்திரமாக பாதுகாத்துக் கொண்டன.
வீடு திரும்பிய சிறுமி.
இரண்டு நாட்களுக்குப் பிறகு மீட்பு படையினர் சிறுமியை இறுதியாக கண்டுபிடித்தனர். அவர்கள் வந்த போது தனது வேலை முடிந்துவிட்டது என்பது போல சிங்கங்கள் அமைதியாக விலகிச் சென்றன. இது போன்ற ஒரு காட்சியை கண்டால் ஆச்சரியப்படாமல் இருக்க முடியுமா?
கடத்தல்காரர்களுக்கு அன்று அதிர்ஷ்டம் குறைவாகவே இருந்தது. தீவிர தேடுதலுக்குப் பிறகு அவர்கள் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு நீதிக்கு முன் நிறுத்தப்பட்டனர். தண்டனையும் வழங்கப்பட்டது. கட்டாய திருமணம் என்பது எத்தியோப்பியாவில் சகஜமாக நடக்கின்றது. அவ்வப்போது தண்டனைகள் அதிகரிக்கும் போது தான் தவறுகளும் குறைகின்றன.
நாட்கள் செல்லச் செல்ல சிறுமி படிப்படியாக தனது சமநிலைக்கு மீண்டு வந்த பின் அவள் கூறியது, "நான் சிங்கங்களுக்கு அருகில் தூங்கினேன். சிங்கங்கள் என்னை ஒருபோதும் பயமுறுத்தவில்லை" என்று கூறியது தான் அனைவரையும் குழப்பத்தில் ஆழ்த்தியது. சிங்கங்களுக்கு இருக்கும் இரக்க குணம் கூட அந்த கொடூர ஆண்களுக்கு இல்லையே என்பது தான் வேதனைக்குரிய விஷயம்.