Sunday 29th of June 2025 - 05:21:02 AM
தவறாக கொடுத்த தீர்ப்பால் மொத்த அரசாங்கமுமே மன்னிப்பு கேட்ட உண்மை கதை.
தவறாக கொடுத்த தீர்ப்பால் மொத்த அரசாங்கமுமே  மன்னிப்பு கேட்ட உண்மை கதை.
Kokila / 23 ஜூன் 2025

உலகில் பல கொலை மற்றும் கொள்ளை சம்பவங்கள் நடக்கின்றன. அவை அனைத்திற்கும் நியாயமான தீர்ப்பு கிடைக்கின்றதா என்றால் பதில் இல்லை. சில வழக்குகள் தனித்து நிற்கின்றன. சில வழக்குகள் தெளிவற்று, போதுமான சாட்சிகள் இல்லாமல் இழுவையில் இருக்கும் அல்லது குற்றவாளியை கண்டுபிடிக்க முடியாத நிலை ஏற்பட்டிருக்கும். இவற்றில் ஜோ அரிடி என்பவரின் வழக்கு சற்று வித்தியாசமானது.

குறைந்த IQ கொண்ட ஒரு மனிதர், 1936 ஆம் ஆண்டு கொலராடோவின் பியூப்லோவில் டோரதி டிரெய்ன் என்ற சிறுமி கொலை செய்யப்பட்டதற்காக குற்றவாளி என நிரூபிக்கப்பட்டு தூக்கிலிடப்பட்டார் ஜோ அரிடி. இருப்பினும், அவருக்கு எதிரான சாட்சிகள் பலவீனமற்றவை, மேலும் அவரது ஒப்புதல் வாக்குமூலம் கட்டாயப்படுத்தப்பட்டதாக பரவலாக நம்பப்பட்டது. உண்மையில், ஜோ குற்றவாளியா அல்லது அவர் ஒரு குறைபாடுள்ள அமைப்பால் பாதிக்கப்பட்டவரா என்பதை மக்கள் புரிந்து கொள்ளவே பல வருடங்கள் ஆகின.

யார் இந்த ஜோ அரிடி?

ஜோ அரிடி 1915 ஆம் ஆண்டு பிறந்தார். சிறுவயதிலிருந்தே குறைந்த அறிவாற்றல் திறன்களோடு வளர்ந்தவர். சுமார் 46 வயதுடைய மனிதரின் IQ திறன் கொண்டவர். இதை கடுமையான மனநலம் பாதிக்கப்பட்டவராக மருத்துவர்களால் கருதப்படுகிறது. ஆனால் அவரது மனத்திறன் ஒரு சிறு குழந்தையை போன்றது.

சாப்பிடுவது, விளையாடுவது, பயிற்சி செய்வது, பார்க்கக்கூடிய, முகரக்கூடிய, அனுபவிக்கக்கூடிய விஷயங்கள் பற்றி அவருக்கு தெரியும். ஆனால் கடவுள், நீதி, தீமை போன்ற விஷயங்கள் எதையும் புரிந்து கொள்ளக்கூடிய திறன் இல்லை. நான்கு முதல் ஆறு வயதுக்கு உட்பட்ட குழந்தையின் மன திறன் கொண்டவர்.

ஆனால், 1930 களின் செய்தித்தாள்கள் அவருக்கு வேறு பெயர்கள் சூட்டின். "பலவீனமான மனம் கொண்ட கொலையாளி", "பலவீனமான, புத்திசாலித்தனமான பாலியல் கொலையாளி", "வக்கிரமான வெறி பிடித்தவன்" என்று பல பெயர்கள் ஜோ அரிடியை பற்றி செய்தித்தாள்களில் வெளியாகின.

கொலை வழக்கில் சிக்கியது எப்படி?

1936 ஆம் ஆண்டு, ஆகஸ்ட் 15ஆம் தேதி நடந்த டோரத்தி ட்ரெயின் என்ற 15 வயது சிறுமியின் கொடூர கொலை சம்பவத்தைப் பற்றி பியூப்லோ நகரமே பேசியது. டோரத்தி என்ற சிறுமி பாலியல் வன்கொடுமைக்கு உள்ளாக்கப்பட்டு, பின் கோடாரியால் கொடூரமாக அடித்துக் கொள்ளப்பட்டார். இந்த செய்தி மக்கள் மத்தியில் குற்றவாளியை உடனடியாக கண்டுபிடித்து தகுந்த தண்டனை அளிக்க வேண்டுமென்ற கடும் கோபத்தை ஏற்படுத்தியது. காவல்துறையினரும் சீக்கிரமாக குற்றவாளியை கண்டுபிடிக்க ஆதாரங்களை அலசி ஆராய்ந்து கொண்டிருந்தனர். அப்போது சந்தேகத்திற்கு உட்பட்ட நபர்களில் ஜோ அரிடியும் ஒருவர்.

ரயில் நிலையத்திற்கு அருகில் ஜோ அடிக்கடி அலைந்து திரிவது வழக்கம். இதனால், கொலை நடந்த பல நாட்களுக்குப் பிறகு காவல்துறையினர் ஜோவை சந்தேகத்திற்கு உட்பட்ட நபர் என்று கருதி காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்றனர். ஆரம்பத்தில் ஒரு கொள்ளை சம்பவத்தை பற்றி அவரிடம் விசாரிக்கப்பட்டது. பிறகு, விசாரணையின் போது சிறுமி கொலை நடந்த நேரத்தில் ஜோ பியூப்லோவில் இருந்ததாக குறிப்பிட்டார். 

ஜோ அன்று கூறிய சாதாரண கருத்து, அடுத்தடுத்த நிகழ்வுகளை இவரோடு தொடர்புபடுத்தி ஒப்பிட்டு பார்க்கப்பட்டது. அவரது அறிவுசார் இயலாமையை பற்றி அறியாத காவல்துறையினர், ஜோவை குற்றவாளி என்று நிரூபித்து அவரை கைது செய்து சிறையில் அடைத்தனர். அது இறுதியில் அவரது மரண தண்டனைக்கு வழிவகுத்தது. 

உறுதியான ஆதாரம் கிடைத்ததா?

ஜோ அரிடிக்கு எதிரான வழக்கு முற்றிலும் அவரது ஒப்புதல் வாக்குமூலத்தை பொறுத்து மற்றும் சூழ்நிலை விவரங்களை வைத்தே இருந்தது. முக்கியமாக குற்றம் நடந்த இடத்துடன் அவரை நேரடியாக இணைக்கும் சான்றுகள் எதுவும் இல்லை. சிறுமி கொலை செய்யப்பட்ட நேரத்தில் அவரைப் பார்த்தவர்களும் யாரும் இல்லை. 

தொழில்நுட்பம் வளர்ச்சி அடையாத காலகட்டம் என்பதால் கோடாரியில் இருக்கும் கைரேகைகளை வைத்தோ அல்லது டிஎன்ஏக்களை வைத்தோ ஆதாரங்களை காவல்துறையால் சேமிக்க முடியவில்லை. அதனால், காவல் அதிகாரிகள் ஜோவை குற்றவாளியாக சித்தரிக்கும் ஒரு கதையை உருவாக்கி, சீக்கிரமாக இந்த வழக்கை மூட நினைத்தனர். ஜோவின் உண்மையான மனநிலையை பற்றி அறியாத அரசு தரப்பினர் மற்றும் காவல்துறையினர், அதனை பயன்படுத்தி எளிதாக ஒப்புதல் வாக்குமூலம் பெற்றுக் கொண்டனர். அதை வைத்து அவரை வன்முறை திறன் கொண்ட ஒரு ஆபத்தான நபராக சித்தரிக்கப்பட்டது. 

இந்த வழக்கில் ஜோவுக்கு சாதகமாக பேசும் வழக்கறிஞர் திறம்பட செயல்படவில்லை என்று பலரும் விமர்சித்தனர். அவர் அரசுதரப்பு சாட்சிகளை போதுமான அளவு குறுக்கு விசாரணை செய்யவில்லை. அவரை காப்பாற்றும் முயற்சியில் சிறிது அக்கறை எடுத்துக் கொண்டிருந்தால் கூட மரண தண்டனையிலிருந்து ஜோ விடுபட்டிருப்பார். ஜோவின் குறைபாடுள்ள மனத்திறனை ஏற்கனவே தெரிந்து கொண்ட வழக்கறிஞர் பெரிதாக செயல்படவில்லை என்று பலராலும் விமர்சிக்கப்பட்டது. இந்த கொடூர கொலை சம்பவத்தில் ஈடுபட்டவர்களை கண்டுபிடிக்க முடியாத காவல்துறை ஜோவை பலி ஆடாக மாற்றியது.

மரண தண்டனை மற்றும் கடைசி உணவு

ஜனவரி 6, 1939 அன்று கொலராடோ மாநில சிறைச்சாலையில் ஜோ தூக்கிலிடப்பட்டார். ஜோவின் இறுதி நாட்களில் அவர் எவ்வளவு அப்பாவித்தனமான ஒரு மனிதன் என்பது அனைவருக்கும் புரிய வந்தது. சிறை ஊழியர்கள் ஜோவை கவனித்தவரையில், அவர் மகிழ்ச்சியாகவும் மேலும் அவரது வரவிருக்கும் மரண தண்டனை குறித்து கவலைப்படாமலும் இருந்தார். பொம்மைகளுடன் விளையாடுவதிலும், காமிக் புத்தகங்களை படிப்பதிலும், காவலர்களுடன் நட்போடு உரையாடுவதிலும் அவர் தனது நேரத்தை செலவிட்டார். ஏனெனில் ஜோவிற்கு தண்டனைகளை பற்றிய முழு புரிதல் இல்லை.

தூக்கு தண்டனை நிறைவேற்றுவதற்கு முன்பு அவர் வேண்டிய எதை வேண்டுமானாலும் சாப்பிடலாம் என்று சொன்னபோது கூட அவர் கேட்டது ஐஸ்கிரீம் மற்றும் அவரது பொம்மை ரயில் தான். தூக்கிலிடும் இடத்திற்கு நடந்து செல்லும் போது கூட தனக்கு கிடைக்கப்பட்ட பொம்மை ரயிலை பிடித்துக் கொண்டிருந்தார். ஜோவிற்கு மரண தண்டனையும் வழங்கப்பட்டது. குற்றம் உடையவரா என்பதே கேள்விக்குரியதாக இருக்கும் ஜோ தனது விதியை சிரித்துக்கொண்டே ஏற்றுக்கொண்டார்.

பல வருடங்களுக்குப் பிறகு 2011 ஆம் ஆண்டு சிறுமி கொல்லப்பட்ட வழக்கை மீண்டும் மறுபரிசீலனை செய்ய சட்ட அறிஞர்கள், வரலாற்று ஆசிரியர்கள் மற்றும் மனநலம் பாதிக்கப்பட்டவர்களுக்கான வக்கீல்களால் உந்தப்பட்டது. இவர்கள் ஆதாரங்களை மறுபரிசலனை செய்து விசாரணை நடவடிக்கைகளை ஆராய்ந்த பிறகு, ஜோவிற்கு வழங்கப்பட்ட தண்டனையின் நியாயத்தன்மை குறித்து கடுமையான கேள்விகளை எழுப்பினர். அதன் பிறகு ஜோ சூழ்நிலைக்கு பலியானவர் என்றும் தவறாக குற்றம் சாட்டப்பட்டு நியாயமற்ற முறையில் தூக்கிலிடப்பட்டார் என்று நிரூபிக்கப்பட்டது. 2011 ஆம் ஆண்டு ஜோ அரிடிக்கு ஏற்பட்ட அநீதிக்கு கொலராடோ கவர்னர் பில் ரிட்டர் மன்னிப்பு கேட்டார்.

ஜோ அரிடியின் வழக்கு சட்டத்திற்கு முன்பு பாதிக்கப்பட்டவர்களுக்கும் கூட அநீதி நடக்கிறது என்பதை சுட்டிக்காட்டுகிறது. தான் செய்யாத தவறுக்கு தண்டனை நிறைவேற்றப்பட்டு, பலருடைய சாபத்துக்கும், பேச்சுக்கும் உள்ளானார் ஜோ. இவரது கதை மனநலம் பாதிக்கப்பட்டவர்களை எவ்வாறு அணுக வேண்டும் என்பதை ஒரு முறை அனைவருக்கும் சக்தி வாய்ந்த விதத்தில் நினைவூட்டுகிறது.

டிரண்டிங்
கப்பலில் கொடூர சிறைச்சாலை. அமெரிக்காவின் அட்டூழியம்
உலகம் / 05 மே 2024
கப்பலில் கொடூர சிறைச்சாலை. அமெரிக்காவின் அட்டூழியம்

சிறைகள் என்றாலே கொடூரம்தான். அந்த கொடூரத்தை கோரமாக்கி, மரணத்தை விட கொடுமையான தண்டனையை கைதிகள் நித்தம

tamil_all_vetri_add
லேட்டஸ்ட்
பிணத்துடன் புணர்ந்து பின் அதை சமைத்து தின்ற சைக்கோ - இஸ்ஸே ஸகாவா 2
வரலாறு / 12 மே 2024
பிணத்துடன் புணர்ந்து பின் அதை சமைத்து தின்ற சைக்கோ - இஸ்ஸே ஸகாவா 2

ஆசை தீர பிணத்துடன் புணர்ந்தவன் பின் அசதி தீர குளித்தான். சாகவாசமாக கிச்சனில் இருந்து கத்திகளை எடுத்த

   லேட்டஸ்ட்
   லேட்டஸ்ட்

Newsletter

எங்களுடன் எப்பொழுதும் இணைந்திருக்க, இங்கே பதிவு செய்து கொள்ளுங்கள்.

தமிழ் All வெற்றி
Tamil All Vetri Logo

உலக தமிழர்களுக்கு ஓர் உடனடி செய்தி சேவை.

Contact Us:

info@tamilallvetri.com +91 934 544 2352 No: 17, 2nd Floor, Singaravelu Street, Vadapalani, Chennai - 600 024.

Legal:

© தமிழ் All வெற்றி. All Rights Reserved. Designed by தமிழ் All வெற்றி