ஒரு நாளில் நாம் மூன்று வேளை உணவு சாப்பிடுகிறோம். அதற்கு இடையில் ஸ்நாக் என்ற பெயரில் நொறுக்கு தீனிகளையும் உட்கொள்கிறோம். இவை அனைத்தையும் ஜீரணம் செய்ய ஒரு நாளைக்கு தண்ணீர் எவ்வளவு லிட்டர் குடிக்க வேண்டும் என்று அளவு வைத்துள்ளோம். இவை அனைத்திற்கும் காரணம் பசி. பசியே இல்லை என்றாலும் ஏதாவது ஒன்றை சாப்பிட வேண்டும் என்ற உணர்வு கண்டிப்பாக நமக்கு தோன்றும்.
எத்தியோப்பியாவில் உள்ள ஒரு பெண் உணவு மற்றும் தண்ணீர் உட்கொண்டு பதினாறு வருடங்கள் ஆயிற்று. "இதையெல்லாம் நான் நம்ப வேண்டுமா" என்று நீங்கள் கேட்கலாம். ஆனால் இதுதான் உண்மை. யூடியூபில் சாப்பாட்டு பிரியர்கள் வெளியிடும் வீடியோவை பார்க்க லட்சக்கணக்கான பேர் உள்ளனர். கண்களை கவரும்படியான, எச்சில் ஊறும் உணவுகளை சாப்பிட முடியவில்லை என்றாலும் பார்த்தாவது பசியாறிக் கொள்வோம் என்று சிலர் நினைப்பதுண்டு. பார்த்தாலே பசியை தூண்டும் உணர்வுள்ள நமக்கு 16 ஆண்டுகளாக பசியே இல்லை என்று சொல்லும் பெண்ணை பார்த்தால் மிகவும் அபூர்வமாகத்தான் இருக்கும்.
எத்தியோப்பியாவில் உள்ள அமெயா என்ற கிராமத்தில் 'முலுவொர்க் அம்பாவ்' என்ற பெண் வசித்து வருகிறார். இவருக்கு பத்து வயது இருக்கும் போது ஒரு நாள் பருப்பு குழம்பை சாப்பிட்டுள்ளார். அதுவே அந்தப் பெண் சாப்பிட்ட கடைசி சாப்பாடு. அதற்கு பிறகு இன்று வரை பசி உணர்வே ஏற்படவில்லை என்று கூறியிருக்கிறார். தண்ணீர் தாகம் கூட ஏற்படவில்லை என்று சொன்னால் நம்ப முடிகிறதா?
இந்த செய்தியை முதலில் தெரிந்துகொண்ட யூடியூபர் 'ட்ரூ பிரின்ஸ்கி' முலுவொர்க் அம்பாவ் வாழும் கிராமத்திற்கு தனது பயணத்தை தொடங்கினர். அந்த கிராமத்திற்கு சென்று அங்குள்ள மக்களிடம் இந்த பெண்ணைப் பற்றிய தகவல்களை சேகரித்தார். பிறகு அவர் தங்கியுள்ள இடத்திற்குச் சென்று நேரடியாக அப்பெண்ணிடம் இது பற்றி கேட்டறிந்து வீடியோ ஒன்றினை வெளியிட்டார். அதன் பிறகே நாடு முழுவதும் இப்படி ஒரு அபூர்வ பெண் வாழ்ந்து வருவது அனைவரின் பார்வைக்கும் வந்தது.
எத்தியோப்பியா வறுமையான நாடு. அப்படிப்பட்ட நாட்டில் மக்கள் உணவு பஞ்சத்தினால் அவதிப்படுகின்றனர். ஆனால் அந்தக் கவலை முலுவொர்க் அம்பாவ்க்கு ஏற்படவில்லை. ஏனென்றால் தனது பத்து வயதில் பசியுணர்வை மறந்த பெண் இன்றுவரை உணவு மற்றும் தண்ணீர் பற்றி நினைத்ததே இல்லை. இருந்தும் ஆரோக்கியமாக வாழ்ந்து வருகிறார் என்பதுதான் ஆச்சரியப்படக்கூடிய விஷயம்.
இத்தனை ஆண்டுகள் தண்ணீர் கூட இல்லாமல் எப்படி உயிர் வாழ முடியும்? இந்தக் கேள்விக்கு மருத்துவர்களால் கூட விளக்கம் கொடுக்க முடியவில்லை. இதுவரை பல மருத்துவர்கள் பரிசோதனை செய்துள்ளனர். ஸ்கேன் செய்து பார்த்தபோது அவரது செரிமான பாதையில் உணவு எதுவும் இல்லை. தண்ணீர் குடித்ததற்கான அறிகுறியும் இல்லை. மேலும் சாப்பிடவே இல்லை என்பதனால் குடலில் கழிவுகளும் இல்லை. இந்தியா, கத்தார், துபாயைச் சேர்ந்த மருத்துவர்கள் கூட மருத்துவ ரீதியாகப் பரிசோதித்துள்ளனர். ஆனால் ஒருவராலும் கூட இந்த வினோத பசியின்மைக்கான காரணத்தை கண்டறிய முடியவில்லை.
உணவில்லாமல் ஆரோக்கியத்தோடு இருப்பது முற்றிலும் சாத்தியம் இல்லாத ஒன்று. இதனை அம்பாவ் கடவுள் கொடுத்த வரமாக நினைக்கின்றார். அதனால் அவரும் கவலைப்படாமல் 'வந்தவரை லாபம் தானே' என்று வாழ்ந்து வருகிறார். இந்நிலையில் முழு வொர்க் அம்பாவ்க்கு பிறந்த குழந்தையும் ஆரோக்கியமாக உள்ளதாக கூறுகின்றனர்.
ஒரு நாளைக்கு எவ்வளவு கலோரி உணவு சாப்பிட வேண்டும் என்ற கணக்கு வைத்து சாப்பிடுபவர்கள் மத்தியில் முழுவொர்க் அம்பாவ் அனைவரையும் ஆச்சரியப்படுத்தியுள்ளார்.